விவசாயிகளுடன் இன்று நடைபெறவிருந்த 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 55-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே 9 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இதற்கிடையில், வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் பிரச்சனைக்கு தீர்வுகாண உச்சநீதிமன்றம் குழு ஒன்றை அமைத்துள்ளது. மேலும், வேளாண் சட்டங்களை அமல்படுத்த தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் பேச்சுவார்த்தை குழு அமைத்துள்ளபோதும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். விவசாய சங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசு இடையேயான 10-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (19-ம் தேதி) நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை நாளை (20-ம் தேதி) நடைபெறும் என மத்திய அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை தொடர்பாக விவசாய சங்க செய்தித்தொடர்பாளர் ராகேஷ் டிகிட் கூறுகையில், நாங்கள் இங்கு முழுமையான ஏற்பாடுகளுடன் வந்துள்ளோம். இங்கிருந்து நாங்கள் இப்போதைக்கு போகமாடோம். போராட்டத்திற்கான தீர்வு நாளை கிடைக்காது என்பது எங்களுக்கு தெரியும். பேச்சுவார்த்தை இன்னும் ஒன்று முதல் இரண்டு மாதங்கள் வரை நீடிக்கலாம்’ என்றார்.