கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி, எண்ணெய், கோதுமை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்நிலையில் பெரும்பாலானவர்களுக்கு விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதுபற்றி அப்பகுதி மக்கள் விற்பனையாளரிடம் சென்று கேட்டால், அவர் முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக ரேஷன் கடை திறக்கப்படவில்லை.இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று சூளாங்குறிச்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கிருந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் சரவணன், சங்க தலைவர் அருணகிரி, தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், உரிய விசாரணை நடத்தி, விடுபட்ட அனைவருக்கும் நாளை (அதாவது இன்று) ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.