கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த சவேரியார்பாளையம் ஏரிகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ராயப்பன் மகன் ஜேக்கப், 36; இவர், மனைவி, மகள், மகனுடன் நேற்று கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் வந்தார்.அவர், கையில் 5 லிட்டர் கேனில் மண்ணெண்ணெயுடன் வந்ததைப் பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கேனை பறிமுதல் செய்து விசாரித்தனர்.அதில், ‘தன் குடும்பத்தை ஊரை வீட்டு ஒதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம்’ என தெரிவித்தார். அவர் கொண்டு வந்த மனுவை, கலெக்டர் அலுவலகத்தில் அளிக்கும்படி போலீசார் அறிவுரை கூறி, அனுப்பி வைத்தனர்
.மனு விபரம்:நான், கடந்த 2018ம் ஆண்டு சவேரியார்பாளையம் பகுதியில் கிணற்று மேட்டு மண் அள்ளினேன். அது தவறு எனக்கூறி, அந்த ஊரைச் சேர்ந்த சிலர் என்னை தாக்கி, கொலை செய்ய முயற்சித்தனர்.இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தேன். அதுவும் தவறு எனக்கூறி, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். பேச்சுவார்த்தைக்குப் பின் அபராத தொகையை 15 ஆயிரம் ரூபாயாக குறைத்தனர்.ஆனால் 5 லட்சம் ரூபாய் அபராதம் தர வேண்டும் என மிரட்டியதுடன், என் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். வீட்டின் மின் இணைப்பை துண்டித்து விட்டனர். அரசு மான்யத்தில் நான் கட்டி வரும் வீட்டிற்கான கட்டுமான பொருட்கள் கிடைக்காமல் தடை செய்துள்ளனர். ஊருக்கு பால் எடுத்துச் சென்ற எனது மகள் மற்றும் குடும்பத்தினரை பிடித்து மிரட்டுகின்றனர். இதுகுறித்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தாங்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.