கள்ளக்குறிச்சி மாவட்டம்
அருகே உள்ளது பெரிய மாரனோடை கிராமம். கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து இந்த கிராமத்துக்கு வந்த ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு நேற்று பெரியமாரனோடை கிராமத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கிராம மக்கள் அனைவருக்கும் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கிறதா? என்பது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
கிருமிநாசினி தெளிப்பு
பின்னர் குமரகுரு எல்.எல்.ஏ., அங்குள்ள மேட்டுத்தெரு, கிழக்கு தெரு, வடக்கு தெரு உள்ளிட்ட 14 தெருக்களுக்கு சென்று கிருமிநாசினி தெளித்தார். அப்போது திருநாவலூர் கூட்டுறவு சங்க தலைவர் மாரனோடை சம்பத், நிர்வாகிகள் ஆரோக்கியசாமி, அமலநாதன், ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர். எம்.எல்.ஏ.வே கிருமிநாசினி தெளித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.